'மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்; முறையான பேச்சுவார்த்தை தேவை' - அனில் கும்ப்ளே


மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்; முறையான பேச்சுவார்த்தை தேவை - அனில் கும்ப்ளே
x

முறையான பேச்சுவார்த்தை மூலமாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்ய முடியும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் கண்டனங்களை தெரிவித்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ""மே 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையான பேச்சுவார்த்தை மூலமாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்ய முடியும். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என அனில் கும்ப்ளே பதிவிட்டுள்ளார்.




Next Story