பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி


பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி
x

 Image Courtesy: AFP

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டோக்கியோ,

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள லிட்மிலா சாம்சோனோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவா 6-7 (4-7), 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் பிரேசிலின் பீட்ரிஸ் ஹாடட் மையாவையும், சீன வீராங்கனைகள் கின்வென் செங் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் கிளைர் லூவையும் (அமெரிக்கா), ஷூவாய் ஜாங் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் பெட்ரா மார்டிச்சையும் (குரோஷியா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தனர்.

இதேபோல் கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அண்டோரா நாட்டை சேர்ந்த விக்டோரியா ஜிம்மெனிஸ் கேசின்ட்சேவாவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மேக்டா லினெட்டை (போலந்து) ஊதித்தள்ளினார். தாட்ஜனா மரியா (ஜெர்மனி), எகடெரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.


Next Story