சாயம் போகும் ஆடைகளை சலவை செய்யும் வழிகள்


சாயம் போகும் ஆடைகளை சலவை செய்யும் வழிகள்
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய்‌ வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.

டைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் பெண்களுக்கு பொறுமை அதிகம். துணியின் தரம், நிறம், விலை, தங்களுக்கு அந்த உடை பொருத்தமாக இருக்கிறதா? என்றெல்லாம் கவனமாக பார்த்து வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் ஆடைகளின் விஷயத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று சாயம் போவது.

இதற்கு முக்கிய காரணம் தரமற்ற சாயங்களை ஆடைகளுக்கு பயன்படுத்துவது தான். மேலும் ரசாயனம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் ‌மாசு போன்ற இதர காரணங்களாலும் துணிகள் வெளுத்து போக நேரிடும். சாயம் போகும் ஆடைகளை சரியாக பராமரிப்பதன்‌ மூலம் பொலிவு குறையாமல் வைத்திருக்க முடியும். அதற்கான சில பராமரிப்பு முறைகளை இங்கே காண்போம்.

புதியதாக வாங்கிய துணிகளை முதன்முதலில் துவைக்கும்‌போது தனியாக ஊற வைப்பதன் மூலம்,‌ அந்த துணிகள் சாயம் போகுமா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அந்த சாயம்‌ பிற துணிகள் மீது பற்றிக்கொள்வதையும் தவிர்க்கலாம்.

சாயம் போகும் ஆடைகளை சில நாட்களுக்கு தனியாக துவைப்பதே சிறந்தது. உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் துவைத்து அலசுவதன் மூலம் துணிகள் சாயம் போவதை சீக்கிரமே தடுக்க முடியும்.

சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய்‌ வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.

சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் துணிகள் விரைவாகவே வெளிறிவிடும். இதனைத் தவிர்க்க நிழலில் உலர்த்தலாம்.

சில நேரங்களில் சாயம் போகும் துணியுடன் ெவள்ைள நிற உடைகளை தெரியாமல் ஊறவைத்திருப்போம். அப்போது அந்த சாயம் வெள்ளை உடைகளில் பற்றிக்கொள்ளும். அதைப் போக்க இவ்வாறு செய்ய வேண்டும். சாயம் பிடித்த உடையை உலர வைக்கும் முன்பே, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதில் பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை ஊற்றி, அந்த நீரில் வெள்ளைத் துணிகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து துவைப்பதன் மூலம் சாயக்கறையை நீக்கிவிடலாம்.

சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது. மடித்து வைத்த பின்பும்‌ சில துணிகளில் சாயம் போகலாம். எனவே நிறங்களின் அடிப்படையில் துணிகளை தனித்தனியே பிரித்து அடுக்கி வைப்பது சிறந்தது.


Next Story