குளிர்காலத்தில் 'காது வலி' வருவது ஏன்?


குளிர்காலத்தில் காது வலி வருவது ஏன்?
x
தினத்தந்தி 25 Dec 2022 1:30 AM GMT (Updated: 25 Dec 2022 1:30 AM GMT)

குளிர்காலத்தில் சளியால் ஏற்படும் முக்கடைப்பு, நாசிக் குழாயின் ‘நாசோபார்னெக்ஸ்’ என்ற அடிப்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் காது வலி உண்டாகும். இதுமட்டுமில்லாமல், குளிர்ச்சியான சூழலில் இருமல் மற்றும் சளியால் காதில் ஏற்படும் நரம்பு அழுத்தமும் வலியை உண்டாக்கும்.

சுற்றிலும் சில்லென்று இருக்கும் குளிர்ந்த காலநிலையில் பலருக்கு உடல் அலுப்பும், வலியும் இருக்கும். குறிப்பாக சளி, இருமல் மற்றும் தொண்டையில் உருவாகும் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய காது வலி பெரும் பிரச்சினையாக இருக்கும். இதை காது வலி, காதில் உண்டாகும் அசவுகரிய உணர்வு, பாதிக்கப்பட்ட காதில் கேட்கும் திறன் குறைவு, குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

மென்மையான திசுக்களால் ஆன காதின் அமைப்பு, மூளை மற்றும் தொண்டை நரம்புகளுடன் இணைகிறது. இதில் குளிர்ந்த காற்று நேரடியாக படும்போது வலி உண்டாகிறது. இந்த வலியை அலட்சியப்படுத்தினால் தீவிரமாகிவிடும். சில நேரம் வலி மூளை வரை பரவி அதீத தலைவலியை உண்டாக்கும்.

காதின் மென்மையான அமைப்பால் சளி அடைப்பு, வலி, தொற்று போன்றவை எளிதில் ஏற்படும். அதிலும், சளியால் ஏற்படும் காது வலிக்கு தொண்டையில் இருந்து பரவும் பாக்டீரியா தொற்றே காரணம். இதனால் சில நாட்களில் காதில் சீழ் வைத்து தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்.

குளிர்காலத்தில் சளியால் ஏற்படும் முக்கடைப்பு, நாசிக் குழாயின் 'நாசோபார்னெக்ஸ்' என்ற அடிப்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் காது வலி உண்டாகும். இதுமட்டுமில்லாமல், குளிர்ச்சியான சூழலில் இருமல் மற்றும் சளியால் காதில் ஏற்படும் நரம்பு அழுத்தமும் வலியை உண்டாக்கும்.

சைனஸ் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இந்த குளிர்கால சூழல் இயல்பாகவே காது வலியை ஏற்படுத்தும். குளிர் காற்றால் காது நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக தலைவலியும், காது வலியும் ஒரு சேர உண்டாகும். இது நாளடைவில் காது கேளாமை பிரச்சினையைக் கூட உண்டாக்கலாம்.

தற்காப்பு வழிமுறைகள்:

குளிர்காலத்திலும், பயணத்தின்போதும் காற்று காதினுள் நேரடியாக நுழையாதபடி காதை மூடிக்கொள்ள வேண்டும். இதற்கு மப்ளர், இயர்பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். காதுகளை எப்போதும் வறட்சியாக வைத்துக்கொள்வது நல்லது.

குளித்த பின்னர் காதில் இருக்கும் ஈரத்தை உடனே துடைக்க வேண்டும். எப்போதும் பருத்தி பட்ஸால் மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும். அல்லது காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சென்று சரியான முறையில் காதை சுத்தம் செய்யலாம்.

காது வலிக்கு தானாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். காதில் வலி ஏற்படும்போது வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுக்கலாம். சைனஸ் பிரச்சினை, அடிக்கடி சளி, இருமல் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

காது வலிக்கான வீட்டு வைத்தியம்:

வாரம் இருமுறை தூதுவளை இலைச் சாற்றை ரசம், சூப் அல்லது கசாயமாக செய்து குடிக்கலாம். தினமும் ஒரு முறையாவது துளசி, தூதுவளை, எலுமிச்சை போன்ற மூலிகை டீ பருகலாம்.


Next Story