பெங்காலி மிஷ்டி டோய்


பெங்காலி மிஷ்டி டோய்
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

பாலில் இருந்து தயாரிக்கும் பொருட்களை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு செய்யக்கூடிய இனிப்பு தான் ‘பெங்காலி மிஷ்டி டோய்’.

முழுவதும் பாலில் இருந்து தயாரிக்கும் பொருட்களை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு செய்யக்கூடிய இனிப்பு தான் 'பெங்காலி மிஷ்டி டோய்'. இது வங்காளத்தைத் தாயகமாக கொண்டது. இதை சாப்பிட்டால் செரிமானம் சீராகும். முகத்தில் உண்டாகும் சுருக்கம் நீங்கி பளபளப்பு உண்டாகும். அதன் செய்முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் - 50 மி.லி.

கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.

சர்க்கரை - 3 தேக்கரண்டி

பால் - 400 மி.லி.

குங்குமப்பூ - 1 கிராம்

பிஸ்தா பருப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரை வடிகட்டியில் ஊற்றி, அதில் இருக்கும் தண்ணீர் நீங்கும் வரை நன்றாக வடிகட்டவும். பின்னர் அதனை முட்டை அடிப்பானைக் கொண்டு கிரீம் பதத்தில் வரும் வரை கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் 300 மி.லி. பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சவும்.

வாணலியில் சர்க்கரையைக் கொட்டி, பொன் னிறமாக உருகும் வரை கிளறவும். பின்பு அதில் 2 மேசைக் கரண்டி பால் ஊற்றி கலக்கவும். பால் சர்க்கரையுடன் கலந்து கிரீம் பதம் வரும்வரை கலக்கவும். இப்பொழுது 'பால் கேரமல்' தயார்.

கன்டென்ஸ்டு மில்க் கலவையில், கேரமல் ஊற்றி கலந்துகொள்ளவும். பின்னர் அதில் தயிர் சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுள் ஸ்டாண்ட் வைக்கவும். தயிர் கலவை உள்ள பாத்திரத்தை அலுமினியம் பாயில் கவர் அல்லது மெல்லிய துணியால் மூடி ஸ்டாண்ட் மீது வைத்து வாணலியை மூடவும். கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதன் மீது பொடிதாக நறுக்கிய பிஸ்தா, குங்குமப்பூ தூவி அடுப்பை அணைக்கவும். இப்பொழுது நாவில் கரையும் 'பெங்காலி மிஷ்டி டோய்' தயார்.


Next Story