கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை


கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை
x
தினத்தந்தி 7 May 2023 1:30 AM GMT (Updated: 7 May 2023 1:30 AM GMT)

வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.

லைமுடியை பாதுகாக்கும் விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தபோதும் முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை, அரிப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக விளங்குகிறது வேம்பாளம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் 'வேம்பாளம் பட்டை'. இது பட்டையாகவும், பொடியாகவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இந்தப் பட்டையை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் பூசலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அனைத்து விதமான தலைமுடி பிரச்சினைகளும் தீரும்.

வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

களையிழந்த சருமத்தை, மீண்டும் பொலிவு நிறைந்ததாக மாற்றக்கூடிய ஆற்றல் வேம்பாளம் பட்டைக்கு உண்டு. இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.

'வெரிகோஸ் வெயின்' எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இந்தப் பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்தால் வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாகும். சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றுக்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும்.

வேம்பாளம் பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலை வலியைக் குறைக்கும். இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்.

வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.

முடி உதிர்வை தடுக்கும் 'மூலிகைகளின் ராணி'

ஆயுர்வேத மருத்துவத்தில் 'மூலிகைகளின் ராணி' என்று துளசி குறிப்பிடப்படுகிறது. இது மயிர்க்கால்களை புத்துயிர் பெறச் செய்து முடி உதிர்வை தடுக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள் ஆகிய சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். துளசி எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் குணமாகும். இது எல்லா வகையான தலைமுடிக்கும் ஏற்றது. துளசி பொடியை கூந்தலுக்கு பேக் மற்றும் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். இதனால் பொடுகு, பேன், இளநரை, அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.

துளசி ஹேர் மாஸ்க்: 2 டேபிள் ஸ்பூன் துளசி பொடி, 2 டேபிள் ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சிறிய கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை தலைமுடி முழுவதும் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.


Next Story