சிறப்பான சேமிப்புக்கு உதவும் குறுகிய கால திட்டம்


சிறப்பான சேமிப்புக்கு உதவும் குறுகிய கால திட்டம்
x
தினத்தந்தி 9 April 2023 1:30 AM GMT (Updated: 9 April 2023 1:30 AM GMT)

இந்த திட்டத்தில் ஒரு முறை செலுத்தப்படும் தொகைக்கு, மாதாந்திர வீதம் அதிகபட்சமாக 7.1 சதவிகிதம் வட்டித் தொகை வழங்கப்படும். 5 வருடத்தின் முடிவில், செலுத்தப்பட்ட தொகை முழுவதுமாக வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

ரோக்கியமான பொருளாதார நிலைக்கு, சேமிப்பு, முதலீடு இவை இரண்டும் முக்கியமானவை. சேமிப்பு, நிதி பாதுகாப்பையும், இலக்குகளை அடைவதற்கான வழியையும் வழங்கும். இல்லத்தரசிகள், வீட்டில் இருந்தே சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 'குறுகிய கால சேமிப்பு திட்டம்' பெரிதும் உதவும். தபால் அலுவலகத்தில் தொடங்கக்கூடிய குறுகிய கால சேமிப்பு திட்டத்தைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS)

ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் 10 வயதுக்கு மேற்பட்ட எவரும் கணக்கு தொடங்கலாம். தனி நபருக்கான கணக்காகவும், மூன்று நபர்கள் வரை இணைந்த கணக்காகவும் இந்த திட்டத்தில் சேர முடியும். 18 வயது நிரம்பாதவர்கள் மற்றும் மனநலம் சரியில்லாதவர்கள் சார்பாக, அவர்களின் பாதுகாவலரும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணைவதற்கு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், முகவரிச் சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது 5 வருடத் திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு முறை செலுத்தப்படும் தொகைக்கு, மாதாந்திர வீதம் அதிகபட்சமாக 7.1 சதவிகிதம் வட்டித் தொகை வழங்கப்படும். 5 வருடத்தின் முடிவில், செலுத்தப்பட்ட தொகை முழுவதுமாக வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

தனி நபர் எனில் ரூ.1,000 முதல் ரூ. 4.5 லட்சம் வரை கூட்டுத் தொகையாக செலுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உள்ள கணக்கில், ரூ.9 லட்சம் வரை கூட்டுத் தொகை செலுத்தலாம்.

கூட்டுக் கணக்கில் உள்ள அனைவருக்கும், சமமான அளவு வட்டித் தொகை வழங்கப்படும். கூட்டுக்கணக்கை தனிநபர் கணக்காகவும், தனிநபர் கணக்கை கூட்டுக் கணக்காகவும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.

இந்த குறுகிய கால சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்திய நாளில் இருந்து, ஒரு வருடம் முடியும் வரை இந்த திட்டத்தை ரத்து செய்ய முடியாது. ஒரு வருடத்திற்கு பின்பு ரத்து செய்யும்போது, அசல் தொகையில் இருந்து 2 சதவிகித தொகை கழிக்கப்பட்டு மீதி தொகை வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ரத்து செய்யும்போது, அசல் தொகையில் இருந்து 1 சதவிகித தொகை கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை கிடைக்கும்.

இந்தக் கணக்கு தொடங்கியவர், திட்ட காலம் முடிவதற்குள் இறக்க நேரிட்டால், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சேமிப்பு தொகையானது கொடுக்கப்படும்.


Next Story