மனதை புத்துணர்வாக்கும் ஆரோக்கிய பழக்கங்கள்


மனதை புத்துணர்வாக்கும் ஆரோக்கிய பழக்கங்கள்
x
தினத்தந்தி 27 Nov 2022 1:30 AM GMT (Updated: 27 Nov 2022 1:30 AM GMT)

ஸ்பாவில் தண்ணீர் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். உடலின் மேல் வட்ட இயக்கத்தில் பொழியும் தண்ணீர் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சூடான அல்லது குளிர்ந்த தண்ணீரால் செய்யப்படும் மசாஜ், நீண்ட நேரம் ஆசுவாசப்படுத்தும். ஸ்பா சிகிச்சையில் பல விதங்கள் உள்ளன. இவை மனதை புத்துணர்வாக்கும்.

டல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமெனில், உள்ளம் புத்துணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நம்முடைய செயல்கள் புதுமையாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இருக்கும். மனதை புத்துணர்வாக வைப்பதற்கு சில வழிகள் இங்கே…

* குரோமா தெரபி:

'வண்ண சிகிச்சை' என்று அழைக்கப்படும் குரோமா தெரபியில், குளியல் அறை ஷவரில் வண்ண விளக்குகளைப் பொருத்தி இருப்பார்கள். ஷவரில் இருந்து தண்ணீர் விழும்போது வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும். இது தண்ணீர் பல வண்ணங்களில் ஒளியாக விழுவது போலத் தோன்றும். நிறங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு. சில நிறங்கள் பசியைத் தூண்டும். சில நிறங்கள் அமைதி மற்றும் தளர்வு உணர்வு தரும்.

இந்த தெரபி, இனிமையான மனநிலையை மேம்படுத்த உதவும். எகிப்தியர்கள் மற்றும் சீனர்களால் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருட்டான இடத்தில் சிறியதாக ஊடுருவும் ஒளி மற்றும் வண்ணங்கள், நம்மை உடல்ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் புத்துணர்வாக்கும்.

ஸ்பா:

ஸ்பாவில் தண்ணீர் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். உடலின் மேல் வட்ட இயக்கத்தில் பொழியும் தண்ணீர் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சூடான அல்லது குளிர்ந்த தண்ணீரால் செய்யப்படும் மசாஜ், நீண்ட நேரம் ஆசுவாசப்படுத்தும். ஸ்பா சிகிச்சையில் பல விதங்கள் உள்ளன. இவை மனதை புத்துணர்வாக்கும்.

இயற்கை:

இறுக்கமான மனநிலையை மாற்ற சிறந்த வழி, இயற்கையோடு கலந்திருப்பது. செடிகளைப் பராமரித்தல், செல்லப் பிராணிகளுடன் விளையாடுதல், மரங்கள் அடர்ந்திருக்கும் சாலையில் காலாற நடத்தல், பூங்காக்களுக்குச் செல்லுதல், கடல் அலைகளை ரசித்தல் என இயற்கையின் அழகில் கவனம் செலுத்தினால் இதயம் லேசாகும். மனது புத்துணர்வாகும்.

குழந்தைகள்:

சிறு குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பது என்று குடும்பத்தோடு நேரம் செலவழியுங்கள். வெளியூர் பயணத்துக்குத் திட்டமிடுங்கள். இத்தகைய செயல்கள் மனஅழுத்தத்தை நீக்கி புத்துணர்வோடு இருக்கச் செய்யும்.

உறக்கம்:

நாம் தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க 7 முதல் 8 மணி நேர சீரான உறக்கம் தேவை. இரவு நீண்ட நேரம் கண் விழித்தால், உடல் மட்டுமில்லாமல் மனநலமும் பாதிக்கப்படும். மனது இறுக்கமாக இருக்கும் நேரங்களில், நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மசாலா நிறைந்த உணவு, எண்ணெய்யில் பொரித்த உணவு, அதிக அளவிலான உணவு ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

மகிழ்ச்சியாக இருக்க நடனம் ஆடுங்கள்

நடனம் ஆடுவது மனஅழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு நீங்கள் முறைப்படி நடனம் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தற்போது எல்லா இடங்களிலும் நடன வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து நடனம் ஆடலாம். பலருடன் சேர்ந்து நடனம் ஆடும்போது கூச்ச உணர்வு, தயக்கம் நீங்கும். வீட்டிலேயே நடனம் ஆட நினைப்பவர்கள் அதற்கென தகுந்த இடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நடனம் ஆடுவதற்கு பொருத்தமான உடைகளை அணிந்து, உங்களுக்குப் பிடித்த பாடலை பாடிய படியோ அல்லது ஒலிக்கவிட்டபடியோ மெதுவாக உங்களுக்கு தெரிந்த நடன அசைவுகளை பின்பற்றி ஆடுங்கள்.


Next Story