21 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் 'கார் அணிவகுப்பு'


21 ஆண்டுகளாக பெண்கள் நடத்தும் கார் அணிவகுப்பு
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

டச்சஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மகளிர் மட்டுமே பங்கு பெறும் ‘கார் ரேலி’, பெண் தொழில் முனைவோர்கள் அமைக்கும் ‘டச்சஸ் உத்சவ்’ எனும் கண்காட்சி மற்றும் அனைத்து மகளிர் வினாடி-வினா போட்டி ஆகியவை நடைபெறுகிறது. இதில் அனைத்து பெண்களும் பங்கு கொள்ளலாம்.

ற்றல் மற்றும் தாங்கள் கற்றுத் தெரிந்ததையும், தங்கள் அனுபவத்தையும் பிறருடன் பகிர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் 2002-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் சவேரா ஹோட்டல்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி முன்னெடுப்பால், ரதி நீலகண்டன், அனு அகர்வால், சுஜாதா முந்த்ரா மற்றும் அனுராதா சச்தேவ் ஆகியோர் இணைந்து தொடங்கியதுதான் 'டச்சஸ் கிளப்'.

இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சமூகத்தில் பல தளங்களிலும், துறைகளிலும் சிறந்து விளங்கும் பிரபலங்கள், இந்தக் குழுவில் கவுரவ உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.

டச்சஸ் கிளப்பின் செயல்பாடுகள், சமுதாயத்தின் பல நிலைகளில் உள்ள பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்து, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், தூண்டுவதற்கும் ஒரு தளத்தை உருவாக்குவதாகும்.

டச்சஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மகளிர் மட்டுமே பங்கு பெறும் 'கார் ரேலி', பெண் தொழில் முனைவோர்கள் அமைக்கும் 'டச்சஸ் உத்சவ்' எனும் கண்காட்சி மற்றும் அனைத்து மகளிர் வினாடி-வினா போட்டி ஆகியவை நடைபெறுகிறது. இதில் அனைத்து பெண்களும் பங்கு கொள்ளலாம்.

இந்த வருடம் இந்த நிகழ்வு வரும் ஆகஸ்டு 21-ந் தேதி நடைபெறவிருக்கிறது. இது குறித்து டச்சஸ் கிளப்பின் முக்கிய நிர்வாகிகள் பகிர்ந்து கொள்ளும்போது, "கொரோனா பரவல் காலத்தில் நாங்கள் கார் அணிவகுப்பை நடத்தவில்லை.

தற்போது மீண்டும் உற்சாகமாக இந்த நிகழ்வை தொடங்கியுள்ளோம். பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல் என ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கார் அணிவகுப்பை நடத்துகிறோம். இந்த வருடம் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி 'தேசபக்தி' என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும், கற்றலும், எங்களுக்கான புரிதலும், வாய்ப்புகளும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது" என்று கூறினர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த கார் அணிவகுப்புகளில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதில் கிரிஜா ஷங்கர் என்பவர், 'இந்த கார் அணிவகுப்பு எப்போது நடைபெறும் என்று ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்போது மகிழ்ச்சியான தருணங்கள், நினைவுகள் கிடைக்கும். இதில் ஒவ்வொரு அணியாக கலந்துகொள்வோம். சிறப்பாக செயல்படும் அணிக்கு பரிசுகளும் உண்டு. மீண்டும் பள்ளி பருவத்துக்கு சென்றது போல நாங்கள் அனைவரும் இந்த போட்டிகளுக்கு உற்சாகமாக தயாராவோம்' என்றார்.

மற்றொரு உறுப்பினர் சவுமியா சங்கர் பேசும் போது, "போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் நாங்கள் அனைவரும் நல்ல தோழிகள். ஆனால், போட்டி ஆரம்பித்துவிட்டால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனே செயல்படுவோம். இதெல்லாம் எங்களை கல்லூரி மாணவிகளைப் போல மனதளவில் இளமையாக இருக்க உதவுகிறது" என்றார் உற்சாகமாக.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பெண்கள் குழுவினர், டச்சஸ் கிளப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


Next Story