மத்திய பட்ஜெட்: நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்படும் 157 நர்சிங் கல்லூரிகள்..!!


மத்திய பட்ஜெட்: நாடு முழுவதும் புதிதாக  தொடங்கப்படும் 157 நர்சிங் கல்லூரிகள்..!!
x
தினத்தந்தி 1 Feb 2023 11:50 PM GMT (Updated: 2 Feb 2023 1:10 AM GMT)

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து சுகாதாரத்துறை தொடர்பான பல அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அது வருமாறு:-

நமது நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் 157 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் இணைந்து புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்.

ரத்த சோகை ஒழிப்பு

* 'சிக்கிள் செல்' ரத்த சோகை நோயை 2047-ம் ஆண்டுக்குள் ஒழித்துக்கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்புக்குள்ளாகிற பழங்குடியினர் பகுதிகளில், 40 வயது வரையிலான 7 கோடி மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கப்படுவதுடன் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனைக்கூடங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

* மருந்து துறையில் ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் புதிய திட்டம் சிறந்த மையங்கள் மூலம் தொடங்கப்படும். குறிப்பிட்ட வகைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய தொழில்துறையை அரசு ஊக்குவிக்கிறது.

பல்துறை படிப்புகள்

* மருத்துவ சாதனங்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட பல்துறை படிப்புகள், திறமையான மனித வளம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள நிறுவனங்களில் தொடங்க ஆதரவு வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story