சினிமா விமர்சனம்: ரெண்டகம்


சினிமா விமர்சனம்: ரெண்டகம்
x
நடிகர்: அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் நடிகை: ஈஷா ரெப்பா  டைரக்ஷன்: டி.பி. பெல்லினி இசை: காஷிப் ஒளிப்பதிவு : கவுதம் ஷங்கர்

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’.

குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டிலாக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். அப்போது மர்ம கும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது உதவியாளரான அரவிந்தசாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்துபோய் இருப்பதாகவும் சொல்கிறது. அரவிந்தசாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டு வந்து அசைனார் வசம் இருந்த தங்க புதையல் விவரங்களை அறிந்து தங்களிடம் சொன்னால் நிறைய பணம் தருகிறோம் என்று ஆசை காட்டுகிறது. அதை போபன் ஏற்று அரவிந்தசாமியிடம் பழகி பழைய நினைவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். துப்பாக்கி சண்டை நடந்த இடத்துக்கு அழைத்து சென்றும் சுற்றி காட்டுகிறார். அப்போது அரவிந்தசாமி நான்தான் அசைனார் என்று சொல்லி போபனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அரவிந்தாமிக்கும், போபனுக்கும் என்ன தொடர்பு, நினைவு இழந்தவராக அவர் நடித்தது ஏன்? என்பதற்கு விடையாக மீதி கதை.

அரவிந்தசாமி கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் அப்பாவியாக வந்து பிற்பகுதியில் தான் யார் என்பதை வெளிப்படுத்தும்போது அதிர வைக்கிறார். போபனிடம் காட்டும் பாசம், ரவுடிகளை துவம்சம் செய்யும் ஆவேசம், ஜாக்கி ஷெராப் கோட்டைக்குள் நுழைந்து குரூரமாக கொல்லும் கோபம் என்று காட்சிக்கு காட்சி அனுபவ நடிப்பால் கவர்கிறார். குஞ்சக்கோ போபன் உடல் மொழி ஹேர் ஸ்டைலில் வித்தியாசம் காட்டி உள்ளார். கிளைமாக்சில் இன்னொரு முகம் காட்டி நிமிர வைக்கிறார்.

அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன்ஆடுகளம் நரேன், ஈஷா ரெபா கதாபாத்திரங்களின் திருப்பங்கள் எதிர்பாராதவை. ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதையை போகப்போக பதற்றம், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் பெல்லினி. கவுதம் ஷங்கரின் ஒளிப்பதிவு பயணத்தையும், கடற்கரையையும் அழகாக படம் பிடித்துள்ளது. காஷிப் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.


Next Story