சீனா-120 கி.மீ., இந்தியா-24 கி.மீ.; எப்படி போட்டி போட முடியும்? சரக்கு ரெயில் வேகங்களை ஒப்பிட்டு சந்திரசேகர ராவ் கேள்வி


சீனா-120 கி.மீ., இந்தியா-24 கி.மீ.; எப்படி போட்டி போட முடியும்? சரக்கு ரெயில் வேகங்களை ஒப்பிட்டு சந்திரசேகர ராவ் கேள்வி
x
தினத்தந்தி 6 Feb 2023 8:07 AM GMT (Updated: 6 Feb 2023 8:10 AM GMT)

இந்தியா மற்றும் சர்வதேச சரக்கு ரெயில்களின் சராசரி வேகங்களை ஒப்பிட்டு அவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்? என தெலுங்கானா முதல்-மந்திரி கேள்வி எழுப்பி உள்ளார்.



ஐதராபாத்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார். அவர், தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

இதன்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி என்ற தனது கட்சி பெயரை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் பாரத ராஷ்டீரிய சமிதி கட்சி என பெயர் மாற்றம் செய்து, அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதற்கான ஒப்புதலையும் பெற்று விட்டார்.





இதனை தொடர்ந்து கட்சியை விரிவுப்படுத்தும் முயற்சியாக, மராட்டியத்தின் நான்டெட் நகரில் நடந்த பொது பேரணியில் கலந்து கொண்டு சந்திரசேகர ராவ் பேசினார். அவர் பேசும்போது, நாட்டின் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் விரைவாக இல்லா விட்டால் பிற நாடுகளுடன் நாம் எப்படி போட்டி போட முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் சரக்கு ரெயிலின் சராசரி வேகம் மணிக்கு 24 கி.மீ. ஆனால், சீனாவில் சரக்கு ரெயிலின் சராசரி வேகம் மணிக்கு 120 கி.மீ. ஆக உள்ளது. இது அமெரிக்காவில் மணிக்கு 78 கி.மீ. ஆகவும், இங்கிலாந்து நாட்டில் மணிக்கு 75 கி.மீ. ஆகவும் உள்ளது. அவர்களுடன் நாம் எப்படி போட்டி போட முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீருக்காக ஏன் மோதல்கள் ஏற்படுகின்றன? என்றும் அவர் கேட்டுள்ளார். நாட்டில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் உள்ளது.

அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நன்னீருக்கு பஞ்சம் இருக்காது. பின்னர் ஏன் தண்ணீருக்காக மாநிலங்கள் அடித்து கொள்கின்றன? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story