நவி மும்பை ஓட்டலில் 17 வயது சிறுமி நடத்திய விபசார விடுதி.. சுற்றி வளைத்தது போலீஸ்


நவி மும்பை ஓட்டலில் 17 வயது சிறுமி நடத்திய விபசார விடுதி.. சுற்றி வளைத்தது போலீஸ்
x

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மும்பை:

மும்பை அருகே உள்ள நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விபசார கும்பலை பிடிப்பதற்காக வியூகம் அமைத்த போலீசார், அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர் போன்று ஒருவரை அனுப்பினர்.

அவரை ஓட்டலின் தனி அறைக்கு அழைத்துச் சென்றதும் போலீசார் சுற்றிவளைத்து விபசார கும்பலை பிடித்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். விபசார தொழிலை நடத்திய 17 வயது சிறுமியை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த சிறுமி, மும்பை அருகே உள்ள மலாட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும், விபசாரத்தின் மூலம் வரும் வருமானத்தில் பெரும்பகுதியைதான் வைத்துக்கொண்டு, விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு சொற்ப அளவில் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து செல்போன், ரூ.84 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஓட்டலில் 17 வயது சிறுமி விபசார தொழில் நடத்தியது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Next Story