ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்...!


ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்...!
x

மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது.

ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டு அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கெற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

"ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று இரவு நான் டோக்கியோவுக்குச் செல்கிறேன், பிரதமர் கிஷிடா மற்றும் திருமதி அபே ஆகியோருக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாக இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story