சாப்பாடு தர தாமதமானதால் ஆத்திரம்- தாயை எரித்துக்கொன்ற மகன் கைது


சாப்பாடு தர தாமதமானதால் ஆத்திரம்- தாயை எரித்துக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 29 Oct 2023 9:30 AM GMT)

சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை மகன் எரித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் நவிமும்பை அருகே நடந்து உள்ளது.

மும்பை,

சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை மகன் எரித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் நவிமும்பை அருகே நடந்து உள்ளது.

தாயை தீ வைத்து எரித்த மகன்

நவிமும்பை அருகே உள்ள அலிபாக், நாவ்கர் பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ்(வயது26). ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளார். இவரது தாய் சங்குனா. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சங்குனா, மகனுக்கு இரவு உணவு கொடுக்க தாமதமானதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகன், தாயிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் கோபத்தில் தாயை கம்பால் தாக்கினார். பின்னர் வீட்டைவிட்டு வெளியே இழுத்து வந்து அரிவாளால் தாக்கினார். எனினும் ஆத்திரம் தீராத அவர் அருகில் கிடந்த காய்ந்த இலைகள், புல்லை தாய் மீது போட்டு தீ வைத்தார். சங்குனாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதையடுத்து அரிவாளுடன் ஜெயேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

சிகிச்சை பலனின்றி பலி

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் சங்குனாவை மீட்டு அலிபாக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் காட்டுக்குள் மறைந்து இருந்த ஜெயேசை பிடிக்க சென்றனர். அப்போது அவர் அரிவாளால் வெட்டிவிடுவேன் என போலீசாரை மிரட்டினார்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை மகன் தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story