மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்குப்பதிவு
மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மனைவியை தாக்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மீது தாக்குதல்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. 51 வயதான இவர், மும்பை பாந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் இவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது, அவர் மனைவியை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் வினோத் காம்ப்ளிக்கும், அவரது மனைவி ஆண்ட்ரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வினோத் காம்ப்ளி சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த பாத்திர கைப்பிடியை எடுத்து மனைவி மீது எறிந்து உள்ளார். இதில் அவரது மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
அப்போது, அங்கு வந்த அவர்களது 12 வயது மகன் சண்டையை விலக்க முயன்றுள்ளான். இருப்பினும் வினோத் காம்ப்ளி கிரிக்கெட் பேட்டால் மனைவியை தாக்க முயற்சி செய்து இருக்கிறார். அவரின் தாக்குதலில் இருந்து தப்பிய ஆண்ட்ரியா பாந்திராவில் உள்ள பாபா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆண்ட்ரியா கணவர் வினோத் காம்ப்ளி மீது பாந்திரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் மனைவியை தாக்கிய வினோத் காம்ப்ளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் வினோத் காம்ப்ளி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.