போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளி கைது


போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளி கைது
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

பணமோசடி

மும்பை அந்தேரி கிழக்கு மற்றும் மேற்கு, மகாகாளி ரோடு, மரோல் பகுதியை சேர்ந்த வியாபாரிகளை குறிவைத்து போலீஸ்காரர் என கூறி வாலிபர் ஒருவர் பணமோசடி செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், மோசடியில் ஈடுபட்ட வாலிபரின் அடையாளம் தெரியவந்தது.

விசாரணையில் அவர் பால்கரை சேர்ந்த பிரவின் அடே(வயது30) என்பதும், மாநகராட்சியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் சீருடை

இவர் போலீஸ் சீரூடை அணிந்துகொண்டு வியாபாரிகளிடம் தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு பணம் பற்றாக்குறையாக இருப்பதாகவும், சில நாட்களில் திருப்பி தருவதாக தெரிவிப்பார்.

பின்னர் அவர்களை நம்ப வைப்பதற்காக அருகில் உள்ள போலீஸ் சவுக்கிக்கு வரும்படி வியாபாரிகளை அழைத்து செல்வது போல் நாடகமாடுவார்.

போலீசில் சிக்கினார்

இதனை நம்பிய சில வியாபாரிகள் ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையில் பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். கடந்த 23-ந்தேதி போலீசார் அப்பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர். அன்றைய தினம் காலையில் வியாபாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற பிரவின் அடேவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story