முன்னாள் மத்திய மந்திரியின் அண்ணன் மகன், நண்பர் பிணமாக மீட்பு


முன்னாள் மத்திய மந்திரியின் அண்ணன் மகன், நண்பர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரியின் அண்ணன் மகன், நண்பர் சண்டிகரில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

முன்னாள் மத்திய மந்திரியின் அண்ணன் மகன், நண்பர் சண்டிகரில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மந்திரி அண்ணன் மகன்

சந்திராப்பூரை சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர். இவர் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டவர் ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவரது அண்ணன் மகன் மகேஷ் அஹிர் (வயது26). மகேஷ் அஹிர் நெருங்கிய நண்பர் ஹரிஷ் தோதேவுடன் (27) கடந்த 14-ந்தேதி மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அவர்கள் உஜ்ஜைன் செல்லவில்லை. அவர்களின் செல்போன்களும் அணைக்கப்பட்டது. எனவே 2 பேரும் மாயமானது குறித்து குடும்பத்தினர் சந்திராப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.

சண்டிகரில் பிணமாக மீட்பு

இந்தநிலையில் சண்டிகரில் உள்ள வனப்பகுதியில் 2 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மாயமான முன்னாள் மத்திய மந்திரியின் அண்ணன் மகன் மகேஷ் அஹிர், அவரது நண்பர் ஹரிஷ் தோதே என்பது தெரியவந்தது.

2 பேரும் டேராடூனில் இருந்து பஸ் மூலம் சண்டிகர் சென்று உள்ளனர். அவர்கள் பிணமாக மீட்கப்பட்ட இடத்தில் மதுபாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ்கள் கிடந்து உள்ளன.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சண்டிகர் போலீசார் 2 பேரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story