பிரதமர் மோடி மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க வேண்டும்- உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


பிரதமர் மோடி மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க வேண்டும்- உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி, மனோஜ் ஜரங்கேவை நேரில் சந்தித்து இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி, மனோஜ் ஜரங்கேவை நேரில் சந்தித்து இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

காலவரையற்ற உண்ணாவிரதம்

மராத்தா தலைவர்களில் ஒருவரான மனோஜ் ஜரங்கே மராத்தா இடஒதுக்கீடு வழங்க 40 நாள் கெடு விதித்து இருந்தார். ஆனால் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கினார்.

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய அவர், ஏற்கனவே போதுமான கால அவகாசம் அரசுக்கு வழங்கி விட்டதாகவும், இனி காத்திருக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தசரா விழாவில் இதுகுறித்து பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மேடையில் உள்ள சத்ரபதி சிவாஜியின் மார்பளவு சிலை முன் வணங்கி மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார்.

உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஷீரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று வருகை தந்தார்.

இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது:-

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சபதம் செய்து காலதாமதப்படுத்தும் தந்திரத்தில் ஈடுபடுகிறார். மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்திற்கு என்ன வழி என்று அரசு சொல்ல வேண்டும். பிரச்சினையை தீர்க்க வழி இருந்தால் ஏன் அரசு பிரச்சினையை சரிசெய்யவில்லை?. பிரதமர் நரேந்திர மோடியை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story