அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியல்; 110 பேர் கைது


அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியல்; 110 பேர் கைது
x

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மறியல் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் மோகனவள்ளி, சுப்பிரமணி, சாமி அய்யா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850-ஐ வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் ஈமச்சடங்குக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு சத்துணவு ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

110 பேர் கைது

அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு க்கு குவிக்கப்பட்டு இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் மறியலில் ஈடுபட்ட 110 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story