வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

உதவித்தொகை

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.9.23 தேதி அன்று 5 ஆண்டுகள் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற, பிளஸ்-2 வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர்கள்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.9.23 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்ச வரம்பு ஏதுமில்லை. பதிவுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

பொதுப்பிரிவினருக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை எனில் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் ரூ.6003 மாதங்களுக்கு ஒருமுறை என தொடர்புடையவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.600, பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் ரூ.1000 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒவ்வொரு மாதமும் தொடர்புடையவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்; மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்க இயலாது.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி,கல்லூரி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வருகைபுரிந்து இலவசமாக விண்ணப்பப்படிவத்தை பெற்றோ அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் தரவிரக்கம் செய்து உரிய அறிவுரை பெற்றோ பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 30.11.23க்குள் சமர்ப்பித்து பயனடையுமாறும், மேலும் தொடர்புக்கு 04364-299790. என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story