ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு வருகிற 9-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டதால், மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 14-ந் தேதி 5 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று 10-வது நாளை எட்டியது. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

காவல் நீட்டிப்பு

இந்தநிலையில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களையும் வருகிற 9-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து மீனவர்கள் 15 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

ரெயில் மறியல்

அதுபோல் மற்ற 12 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களும் சேர்ந்து வருகிற 3-ந் தேதி மண்டபத்தில் ரெயில் மறியல் நடத்துவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story