நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு


நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு
x

நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ராசப்னம் ஆகியோர் ஆலோசனையின் படி நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், மீன்வளத்துறை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் பாலுகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மீன்விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 10 கடைகளில் நடந்த இந்த ஆய்வில் 3 கடைகளில் மீன்களில் பார்மலின் பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதும், தரமற்ற மீன்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 46 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கேயே கிருமி நாசினி தெளித்து அவைகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து இதுபோல் மீன்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story