பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 26 Oct 2023 7:00 PM GMT (Updated: 26 Oct 2023 7:01 PM GMT)

கடன் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்
கோவை


கடன் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


ரூ.6 லட்சம் கடன்


சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (வயது 35). பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சென்னை தேனாம்பேட் டையை சேர்ந்த ஹேமாவதி (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட் டது.

அவர்கள் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஹேமாவதி, சுந்தரியிடம் தனக்கு கடன் கொடுத்தால், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.


அதை நம்பிய சுந்தரி தன்னிடம் இருந்த ரூ.3½ லட்சம் மற்றும் தனக்கு தெரிந்த புஷ்பா என்பவரிடம் இருந்து வாங்கிய ரூ.2½ லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சத்தை ஹேமாவதியிடம் கடனாக கொடுத்தார்.

ஆனால் பணம் வாங்கி சில மாதங்கள் கடந்த பிறகும் ஹேமாவதி அசல் அல்லது வட்டிப்பணம் ஏதும் தர வில்லை என்று கூறப்படுகிறது.


வெளிநாட்டு பணம்


இதனால் ஏமாற்றம் அடைந்த சுந்தரி தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி ஹேமாவதியிடம் கேட்டார். அதற்கு ஹேமா வதி, சுந்தரியிடம் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வந்தால் வட்டி மற்றும் அசல் பணத்தை சேர்த்து தருவதாக கூறினார். அதை நம்பிய சுந்தரி திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.


அங்கு ஹேமாவதி மற்றும் திருப்பூரை சேர்ந்த அய்யப்பன் (41) ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக இருந்த கருப்பு நிற காகிதங்கள் இருப்பதை காண்பித்து, அதை ரசாயன திரவத்தில் கழுவி எடுத்தால் வெளிநாட்டு பணமாக மாறி விடும் என்று தெரிவித்தனர்.


கருப்புநிற காகித கட்டுகள்


மேலும் 6 கருப்பு நிற காகிதங்களை ரசாயனத்தில் கழுவி யூரோ நோட்டுகளாக மாறுவதை செயல்முறையாக செய்து காட்டினர். அதை பார்த்து ஆச்சரியம் அடைந்த சுந்தரியிடம், மற்ற கருப்பு நிற காகித கட்டுகளை கொடுத்தனர்.

மேலும் அதை கழுவ தேவையான ரசாயன திரவம் கோவையில் உள்ள தாமு (40) என்பவரிடம் உள்ளது,

நீங்கள் கோவை வந்தால் வாங்கி தருவதாக ஹேமாவதி கூறினார்.அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கோவை காந்திபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் தற்போது ரசாயன திரவம் இருப்பு இல்லை.

எனவே அதை, பின்னர் தருவதாக கூறினர். ஆனால் சுந்தரி அவர்களிடம் எனக்கு வெளிநாட்டு பணம் தேவையில்லை. நான் கொடுத்த ரூ.6 லட்சத்தை அப்படியே திருப்பி கொடுத்தால் போதும் என்றார்.


2 பேர் கைது


இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமாவதி, அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களுக்கு உடந்தையாக இருந்த கோவை செல்வபுரத்தை ேசர்ந்த தாமு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் கருப்பு நிற காகிதங்கள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து அதை ரசாயனத்தில் கழுவினால் நோட்டுகளாக மாறும் என்று கூறி வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story