சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை


சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும் சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 23.5.2020 அன்று மாலை 3 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வயலுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த கெடார் முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாகேஷ் மகன் விக்னேஷ் (25), முருகையன் மகன் சுபாஷ் (24), பழனிவேல் மகன் சுபாஷ் (24) ஆகிய 3 பேரும் அந்த சிறுமியை வழிமறித்து சுடிதார் வாங்கி வைத்துள்ளதாகவும், அதனை தருவதாகவும் கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர்.

பின்னர் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் அந்த சிறுமியை தள்ளி 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சாகும் வரை சிறை

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் விக்னேஷ், எம்.சுபாஷ், பி.சுபாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ், எம்.சுபாஷ், பி.சுபாஷ் ஆகியோர் சாகும்வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story