கே.சி. பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு: ஈபிஎஸ்-ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கே.சி. பழனிசாமி  மேல் முறையீட்டு வழக்கு: ஈபிஎஸ்-ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த காலத்துத்திற்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாகவும், அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அதனால் குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும் தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story