ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை


ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

பண்ருட்டியில் ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி

திருமண நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் பாலமுருகனின் ஸ்டூடியோ ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அருகில் உள்ள கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாலமுருகன் விரைந்து ஸ்டூடியோவுக்கு வந்துபார்த்தார். அப்போது அங்கிருந்த டிஜிட்டல் கேமரா, டிரோன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளை யடித்துச் சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதில் பாலமுருகன் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு அங்கு புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story