சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் தனிக்குழு கூட்டம்


சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் தனிக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:47 PM GMT)

சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் தனிக்குழு கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படியும், சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான தனிக்குழு கூட்டம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்துறை, காவல்துறை, மாவட்ட சமூகநலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புதுறை, தொழிலாளர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக இயக்குனர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அந்தந்த துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 62 பேர் கண்டறியப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் குடும்ப வன்முறை குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதுபோல் மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பினர்கள் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகள் குறித்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க செய்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


Next Story