திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தி வருகிறது


தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

திராவிட மாடல் ஆட்சி பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று நாகையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

நாகப்பட்டினம்


திராவிட மாடல் ஆட்சி பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று நாகையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

பொதுக்கூட்டம்

நாகை அவுரி திடலில் திராவிட கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். செயலாளர் புபேஷ் குப்தா வரவேற்றார். பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குலக்கல்வி

விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி முறையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது போன்ற திட்டங்களை அமல்படுத்தும் பா.ஜ.க. அரசை இந்தியாவை விட்டு விரட்டுவதற்குதான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் மேகநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்த ராஜா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story