தியாகதுருகத்தில் பரபரப்பு போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை


தியாகதுருகத்தில் பரபரப்பு      போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

தியாகதுருகத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,


விசாரணைக்கு அழைத்த போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புதுமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் முருகன் (வயது 23), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் தனது நண்பர் சதீஷ்குமாருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செந்தில்குமார் மனைவி விஜியா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முருகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்ததாக தெரிகிறது.

தொழிலாளி தற்கொலை

இதனால் பயந்து போன முருகன் நேற்று அதிகாலை வீட்டிற்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முருகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் இதுபற்றி தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருணாசலம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story