திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 26 Oct 2023 7:00 PM GMT (Updated: 26 Oct 2023 7:00 PM GMT)

திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மேல்எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 40). விவசாயி. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மகள் அபிநயா (19) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அப்போது தன்னுடன் படிக்கும் காரிமங்கலம் முக்குளம் அடுத்த தோட்டக்காரன் கொட்டாய் சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரங்கசாமி (25) என்பவரை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்று கொண்டதாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அபிநயா கணவருடன் கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்றார்.

விசாரணை

அப்போது பெற்றோர் சமாதானப்படுத்தி அபிநயாவை கணவருடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நேற்று சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் போன் மூலம் அபிநயா தூக்குப்போட்டு கொண்டதாக அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த அபிநயாவின் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கழுத்தில் காயங்களுடன் படுக்க வைத்து இருந்ததாகவும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அபிநயாவின் தந்தை அண்ணாமலை காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்தது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story