வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி!


வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி!
x

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் ராணுவ பயிற்சிக்காக தென் கொரியா வந்துள்ளது.

சியோல்,

தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவில் இருந்து தென் கொரியாவை பாதுகாக்க, தென் கொரியாவில் சுமார் 28,500 துருப்புக்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் கடந்த வாரம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று முன் தினம் ஏவுகணை சோதனை நடத்தியது.

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தென் கொரியாவும் அமெரிக்காவும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது முதல் கூட்டு கடற்படை பயிற்சியை கொரிய தீபகற்பத்தில் தொடங்கின.

வட கொரிய தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்க, தென் கொரியா-அமெரிக்க ராணுவத்தின் வலுவான கூட்டணியை நிரூபிக்க இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தென்கொரிய கடற்படை பகிரங்கமாக தெரிவித்துள்ளது.


Next Story