மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: முதல் சுற்றில் எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி


மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: முதல் சுற்றில் எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி
x

கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ் முதல் சுற்றில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் டஸன் லாஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 4-6, 5-7 என்ற நேர்செட்டில் லாஜோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்ற ஆட்டங்களில் பாகுன்டோ பாக்னிஸ் (அர்ஜென்டினா), பிரன்டன் நகாஷிமா (அமெரிக்கா), எமிலியோ நவா (அமெரிக்கா), குய்டா பெல்லா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா)-எம்மா ரடுகானு (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள். 2 மணி 33 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானுவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் சோபியா கெனின் (அமெரிக்கா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முசோவா (செக்குடியரசு), ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story