வளையல்களை பராமரிக்கும் வழிகள்


வளையல்களை பராமரிக்கும் வழிகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 1:30 AM GMT (Updated: 27 Aug 2023 1:30 AM GMT)

உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது சிறந்தது.

ந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரணங்களில் வளையல்களுக்கு முக்கிய இடம் உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம், வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும். எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது.

உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது சிறந்தது.

பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.

செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வை படும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.

குளிப்பது, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.

வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.


Next Story