திருப்பத்தூர்: விண்ணமங்கலம் வாக்குச்சாவடியில் வி.வி.பாட் கோளாறு - வாக்குப்பதிவு நிறுத்தம்


திருப்பத்தூர்: விண்ணமங்கலம் வாக்குச்சாவடியில் வி.வி.பாட் கோளாறு - வாக்குப்பதிவு நிறுத்தம்
x

சுமார் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 74-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் காலை 10 மணியளவில் வி.வி.பாட் இயந்திரத்தில் ஏற்பட்ட பேட்டரி கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 11.40 மணியளவில் மீண்டும் வி.வி.பாட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக மென்பொருள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால், வரிசையில் நின்ற வாக்காளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும் 74-வது வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வி.வி.பாட் இயந்திரம் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story