தலையங்கம்

தமிழ்நாட்டுக்கு என்ன கிடைக்கும் ?


What will Tamil Nadu get?
27 July 2024 12:36 AM GMT

சென்னை,

இதுவரை நடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பா ஜனதா, இப்போது நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மொத்தமுள்ள 543 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 272 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பா ஜனதா 240 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், பீகாரில் 12 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தந்தால்தான் பா ஜனதா ஆட்சி அமைக்கமுடியும் என்ற நிலையில், அந்த கட்சிகளின் ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.

அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் பா ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலையில், இருவரும் தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்கள் கோரிக்கைகளுக்கு மேலாக இப்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்த இரு மாநிலங்களுக்கும் வாரி வாரி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சிறப்பு அந்தஸ்து கொடுக்க முடியாத நிலையில் அதற்கு மேலே அதிக பலனளிக்கும் பல நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பீகாரில் சாலை திட்டங்களுக்கு ரூ,26 ஆயிரம் கோடியும், 2,400 மெகாவாட் அனல் மின்சார நிலையம் அமைக்க ரூ,21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ,11,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ,15 ஆயிரம் கோடியும், போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கும், தொழில் வழித்தடத்துக்கும், பிற்படுத்தப்பட்ட பகுதிகளை மேம்படுத்தவும், போதுமான நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோல வேறு சில மாநிலங்களுக்கும் வெள்ளத்தடுப்புக்காக நிதி உதவிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாட்டுக்காக எந்த திட்டமும் அறிவிக்கப்படவுமில்லை, தமிழ்நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 83 நிமிட உரையில் பீகார், ஆந்திராவின் பெயர் தலா 5 முறை குறிப்பிடப்பட்டது. வழக்கமாக திருக்குறள், ஆத்திச்சூடி, புறநானூறு போன்றவற்றை மேற்கோள்காட்டி பேசும் நிதி மந்திரி, இந்தமுறை ஒருமுறைகூட அதையெல்லாம் குறிப்பிடவில்லை.

'தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் தி மு க, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதால்தான் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது' என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டுக்கு என்று தனியாக எந்த திட்டத்தையும் அறிவிக்காவிட்டாலும், மொத்தமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பலன் அதிகளவில் கிடைக்கும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். விவசாயம், சிறு-குறு, நடுத்தர தொழில்கள், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி. ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உதவி மற்றும் சலுகைகளில் கணிசமான அளவு தமிழகத்துக்கு தானாகவே கிடைக்கும். ஏனெனில் இந்த துறைகளிலெல்லாம் தமிழ்நாடு கொடிகட்டி பறக்கிறது.

எனவே தமிழ்நாட்டின் பெயர் சொல்லாவிட்டாலும் இந்த துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் பலன் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். என்றாலும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் கோரியிருந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதி உதவி உள்பட சில திட்டங்களுக்கு நிதி மந்திரியின் பதிலுரையில் அறிவிப்புகள் வரவேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.