தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை


தங்கர்பச்சானின் புதிய படம்: அழகிக்குப்பின் அழுத்தமான கதை
x

‘அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’, என் படங்களில் இன்னொரு மைல் கல் என்கிறார், டைரக்டர் தங்கர்பச்சான். மேலும் இந்தப் படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

"பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள், மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் படத்தில் நிறைந்து இருக்கும். உறவு களின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறு கதையை தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா.. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் எல்லோரும் மாட்டிக்கொள்வோம்.. 'அழகி'க்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.

படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி, தமிழ் பற்றுதல் உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்தப் படத்தை எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும் எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன்.

இந்தக் கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் என அசலான நடிகர்களாக, இவர்களை விடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தும்.

ஒவ்வொரு நாளும் 'தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்கு பெருமைன்னு பாரதிராஜா சொல்வார். ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு, இந்த கதையை சொன்னதும் ``வந்துடுறேன் ஐயா''ன்னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது. கவுதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத்தேர்வை அத்தனை கச்சிதமாக நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் அனுபவம் படத்தில் பேசியிருக்கிறது.

மம்தா மோகன்தாஸ்தான் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர். இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன். அங்கேயிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது. 'எப்ப ஷுட்டிங்?'னு கேட்டுட்டே இருக்கு.

நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன். 'கல்வெட்டு' கதையை 'அழகி'யாக்கினேன். 'அம்மாவின் கைப்பேசி', 'ஒன்பது ரூபாய் நோட்டு' ஆகிய படங்களை அடுத்து இந்தப் படம்.

'கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன' என்ற என் சிறுகதையை இப்போது, 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்."


Next Story