குடும்ப தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு... மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்


குடும்ப தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு... மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 April 2024 1:16 AM GMT (Updated: 27 April 2024 1:25 AM GMT)

குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ராசு. இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் அப்பகுதியில் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து, விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவர் தனியாக வசித்து வருகிறார். கடைசி மகன் மருதுபாண்டி பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் இரண்டாவது, மூன்றாவது மகன்கள் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்த நிலையில், இரண்டாவது மகனின் மனைவியான ஜெயலலிதாவுக்கும், ராசுவின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறில், ஜெயலலிதாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோரை ராசுவின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த முருகேசன் மற்றும் அவரது மகன்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, நள்ளிரவு நேரத்தில் ராசுவின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, ராசு, பாண்டியம்மாள், மருதுபாண்டி மற்றும் பாண்டியம்மாளின் சகோதரர் உள்ளிட்ட 4 பேரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story