புதுக்கோட்டையில் பலாப்பழ கண்காட்சி நடத்த வேண்டும்


புதுக்கோட்டையில் பலாப்பழ கண்காட்சி நடத்த வேண்டும்
x

புதுக்கோட்டையில் பலாப்பழ கண்காட்சி நடத்த வேண்டும் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை

காய்கறி ஏ.டி.எம். திட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அப்போது மலையடிப்பட்டி மகேந்திரன் பேசுகையில், ``கீரனூரில் விதை உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்க வேண்டும்.

குளத்தூர் பகுதியில் உழவர் அடையாள அட்டையை தாமதம் இல்லாமல் வினியோகிக்க வேண்டும். காய்கறி ஏ.டி.எம். திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கீழையூர்-ஒடுகம்பட்டிக்கு பள்ளி மாணவ-மாணவிகள் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மீண்டும் நடத்த வேண்டும். விவசாயம் செய்ய பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தும் கொடுக்கப்படாமல் உள்ளது. பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பலாப்பழ கண்காட்சி

தினகரன் பால்சாமி பேசுகையில், ``மாவட்டத்தில் பலாப்பழ உற்பத்தி அதிகமாக உள்ளது. கேரளாவில் பலாப்பழம் தொடர்பாக சர்வதேச கண்காட்சி நடத்தப்பட்டு தொழில் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் பலாப்பழ கண்காட்சி நடத்த வேண்டும். பலாப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.

மாங்காட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்'' என்றார். செல்லத்துரை பேசுகையில், `மாவட்டத்தில் விளையும் பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தனபதி பேசுகையில், ``மாவட்டத்தில் பாசனக் குளங்களுக்கு வரும் வரத்து வாரிகள் தூர்வாரப்படவேண்டும். காவிரி பாசனப் பகுதிகளில் கால்வாய்கள் உரிய காலத்தில் தூர்வார வேண்டும். தைல மரங்கள், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தியை அதிகாிக்க சிறுதானிய மாதிரி தளைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்

தங்கராஜ் பேசுகையில், `497 ஊராட்சிகளிலும் மொத்தம் 9 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அதனை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் பராமரிக்க வேண்டும்' என்றார். விசுவநாதன் பேசுகையில், `விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45 வழங்க வேண்டும். மாட்டுத்தீவனங்கள் மானியத்தில் வழங்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிடவும் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார். மிசா மாரிமுத்து பேசுகையில், கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு சரிவர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. `கவிநாடு கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்துவாரிகளை தூர்வார வேண்டும். கனிமவள கொள்ளையை தடுத்து பாதுகாக்க வேண்டும்' என்றார். ரமேஷ் பேசுகையில், `குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு கூடுதல் டிராக்டர்களுக்கு அனுமதிக்க வேண்டும். கருவேலமரங்களை அகற்ற வேண்டும். காடைஇடையாத்தூர், கூத்தனூர், மாம்பழத்திவயல் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிவாரணத்தை வழங்க வேண்டும்' என்றார்.

மதுபான ஆலையின் கழிவுநீர்

இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இந்த நிலையில் விராலிமலை குன்னத்தூர் அருகே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கால்வாயை கோரையாற்றில் நேரடியாக இணைப்பதற்கு பதிலாக அங்குள்ள தனியார் மதுபான தொழிற்சாலையை சுற்றி வந்து கோரையாற்றில் இணைக்கும் படி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மதுபான தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் அதில் கலக்கும் எனவும், அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர்.

மேலும் மதுபான ஆலையின் கழிவு நீரை பாட்டில்களில் எடுத்து வந்து கலெக்டரிடம் காண்பித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரினர். மேலும் அவர்கள் கூட்டரங்கில் தரையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா உறுதியளித்ததோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.


Next Story