பொது பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டுகோள்


பொது பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டுகோள்
x

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்டமன்ற மனுக்கள் குழு வர உள்ளதால் தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம் என்று கலெக்டர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்டமன்ற மனுக்கள் குழு வர உள்ளதால் தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம் என்று கலெக்டர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற மனுக்கள் குழு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-23-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விரைவில் வருகிறது. ஆகவே, மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்தான மனுக்களை மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதிக்குள் அனுப்பலாம்.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்க வேண்டும். வார்த்தைகள் கண்ணியமாக இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

தனிநபர் குறை, கோர்ட்டில் உள்ள வழக்குகள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா வேண்டுதல் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை தொடர்பான மனுக்கள் அனுப்பக்கூடாது.

தகவல் தெரிவிக்கப்படும்

ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும். அக்டோபர் மாதம் 7-ந் தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story