மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவர் கைது


மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 6:53 PM GMT (Updated: 1 Jun 2023 9:52 AM GMT)

கும்பகோணத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நடைபயிற்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த மாதம் (மே) 26-ந்தேதி காலை மூதாட்டி ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.

இந்த சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், ஏட்டுகள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தனிப்படை போலீசார் வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் (வயது38) என்பதும், இவர் தற்போது கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் தங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வெற்றிவேலை கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் சங்கிலி மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story