விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாததால் குடிநீர்,பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு பூக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை


விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாததால் குடிநீர்,பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு பூக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாத தால் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் பூக்கடையையும் பூட்டி அதிகாரிகள், சீல் வைத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஆக மொத்தம் ரூ.17 கோடியே 71 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது. இதனால் நகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.10½ லட்சம் வசூல்

நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம், காமராஜர் தெரு, திரு.வி.க. சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வருவாய் அலுவலர் ரவி, வருவாய் உதவியாளர் கோவிந்தன், பணி ஆய்வாளர் ஹரிகரன் ஆகியோர் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் சொத்து வரியாக ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்து 619-ம், குடிநீர் இணைப்பு கட்டணமாக ரூ.78,250-ம், குத்தகை இனங்களாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 745-ம், தொழில் வரியாக ரூ.8,750-ம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணமாக ரூ.57,440-ம், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக ரூ.62,130-ம் ஆக மொத்தம் ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 934 வசூல் செய்யப்பட்டது.

66 இணைப்புகள் துண்டிப்பு

மேலும் பழைய பஸ் நிலையத்தில் 6 மாதமாக வரி பாக்கி செலுத்தாமல் இருந்த ஒரு பூக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுதவிர குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்த 32 பேரின் இணைப்புகளையும், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்த 34 பேரின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது.


Next Story