நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது


நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது
x

நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்தது.

சூறைக்காற்றுடன் மழை

நெல்லையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வானில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இருள் சூழ்ந்தது. மேலும் சூறைக்காற்று பலமாக வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆட்டோ மீது விழுந்த மரம்

அதேநேரத்தில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் அருகே நின்ற பழமையான வேப்பமரம் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு நின்ற ஆட்டோவில் மரம் விழுந்தது. ஆனால் அதில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் ஆட்டோ லேசாக சேதம் அடைந்தது.

மேலும் மரக்கிளை விழுந்து அங்குள்ள மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பிகளை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர்.

இதேபோல் நெல்லை வடக்கு பாலபாக்கியாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4¾ மணி அளவில் வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு 5.10 மணியளவில் மழை தூறியது. தொடர்ந்து பலத்த மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் மழைநீருடன், வாறுகால்களில் தேங்கி இருந்த கழிவுகள் அடித்து வரப்பட்டு தெருக்கள், சாலைகளில் வெள்ளமாக ஓடியது. சாலைகளில் பஸ், லாரி, கார்கள் ஊர்ந்து சென்றன.


Next Story