மகாளய அமாவாசையை முன்னிட்டுகன்னியாகுமரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ஏராளமானோர் திரண்டனர்


மகாளய அமாவாசையை முன்னிட்டுகன்னியாகுமரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ஏராளமானோர் திரண்டனர்
x

மகாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமானோர் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ெகாடுத்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

மகாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமானோர் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ெகாடுத்தனர்.

மகாளய அமாவாசை

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்க நேற்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

புனித நீராடினர்

அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தனர்.

பின்னர் பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர்.

பகவதி அம்மன் கோவில்

மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், உச்சிகால தீபாராதனை, பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வெள்ளி பல்லக்கில் வலம் வருதல்

மாலையில் சாயராட்சை தீபாராதனை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வருதல் நடந்தது. தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story