வீடுகளை வெளிபக்கமாக பூட்டி நகை, பணம் கொள்ளை


வீடுகளை வெளிபக்கமாக பூட்டி நகை, பணம் கொள்ளை
x

துப்பத்தூரில் வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு நகை. பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

வெளிப்பக்கமாக பூட்டு

திருப்பத்தூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ரபீக் (வயது 55). கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கினார். நேற்று அதிகாலை ரபீக் எழுந்து கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு வெளிபக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்கள் வந்து கதவை திறந்தனர். அப்போது மர்ம நபர்கள் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக கம்பியை விட்டு கைப்பையை எடுத்து, அதிலிருந்த ரூ.83 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

நகை, பணம் திருட்டு

மேலும் அதே தெருவில் வசிக்கும் கவிதா (40) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது மகளுடன் திருப்பூர் சென்றிருந்தார். சம்பவத்தன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே குதியில் பூட்டியிருந்த ஜெயா (40) என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.78 ஆயிரத்தை திருடிக்கொண்டு, வீட்டை வெளிபக்கமாக பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் காஞ்சனா என்பவர் வீட்டில் செல்போனை திருடி சென்றுள்ளனர். கண்ணம்மா என்பவரது வீட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கண்ணம்மா கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் எழுந்து வருவதற்குள், மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து ரபீக் உள்பட 5 பேரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடு களில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story