பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

போதுமான அளவு நீர் இருப்பை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம்

பலத்த மழை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீர் ஆகியவை சேமித்து வைக்கப்படுகிறது. இதை தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட 'மாண்டாஸ்' புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதனால் நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 13-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு ஏரிகளுக்கும் வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் மழை பொய்த்துப் போனது. அதேபோல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கடல் போல் காட்சி

புழல் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு 240 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.82 அடியாக பதிவாகியது. ஏரியில் 2.767 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் 3.424 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் 3.158 டி.எம்.சி. தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

அதிகாரிகள் கடிதம்

புழல் ஏரியும் 95 சதவீதம் நிரம்பி இருப்பதால் வரும் நாட்களில் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கும் தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்படும். மேலும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வரும் நாட்களில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story