பஞ்சப்பள்ளி அருகேகுடும்ப தகராறில் பெண் தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்


பஞ்சப்பள்ளி அருகேகுடும்ப தகராறில் பெண் தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்
x
தினத்தந்தி 31 May 2023 5:00 AM GMT (Updated: 31 May 2023 5:02 AM GMT)
தர்மபுரி

பாலக்கோடு

பஞ்சப்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

பெண் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே நடுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் கார்த்திகா (வயது 23). இவருக்கும், கும்மனூர் அருகே உள்ள பொக்லைன் டிரைவர் வெங்கடேஷ் (29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கலெக்டர் விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கார்த்திகாவின் தாயார் சித்ரா போலீசில் புகார் செய்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story