உலக தண்ணீர் தினம்: நீரின் முக்கியத்துவம் குறித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ


உலக தண்ணீர் தினம்: நீரின் முக்கியத்துவம் குறித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ
x
தினத்தந்தி 22 March 2023 3:24 AM GMT (Updated: 22 March 2023 3:37 AM GMT)

நீரில்லையேல் உயிர் இல்லை என்பது உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது தண்ணீர், இப் பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும் மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை மாறாது. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் ஐயன் வள்ளுவர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் நிலம் தீ நீர் விளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று சொல்கிறது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர்.

மனித உடலில் தண்ணீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் தீமை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது. நீர் நிலைகளின் அளவை பெயர் வைத்தவர் தமிழர். குளம், குட்டை, ஏரி, நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று பிரித்து பெயர் சூட்டினர் தமிழர்கள். எல்லாமே நீர் உள்ள இடம்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. கடல் நீரை முன்னீர் என்றும் ஆற்றும் நீரை நன்னீர் என்றும் குடிநீரை இந்நீர் என்றும் குளிந்த நீரை தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம்.

உடம்பை குளிர்வித்தலே குளித்தல் ஆனது. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது தமிழ் பழமொழி. நமது உடலின் அனைத்து உறுப்புகளும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட பல நாட்கள் இருக்க முடியும். நீர் இன்றி வாழ முடியாது. இத்தகைய உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். 'உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும், நம்மை காக்கும் நீரை வீணாக்கக் கூடாது, நீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதில் இருந்து நம்மை காப்பது தண்ணீர்தான். நீரில்லையேல் உயிர் இல்லை என்பது உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம் நன்றி" இவ்வாறு கூறியுள்ளார்.



Next Story