பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு


பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 31 Jan 2023 8:28 AM GMT (Updated: 31 Jan 2023 9:35 AM GMT)

பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேற்றைய நிலவரப்படி 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.

பல பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் இன்னும் 57 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 27 பேர் காவல் துறை அதிகாரிகள் என கூறப்பட்டுள்ளது.


Next Story