சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கி உள்ளனர் - பேரிடர் மேலாண்மை துறை


சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கி உள்ளனர் -  பேரிடர் மேலாண்மை துறை
x
தினத்தந்தி 16 Oct 2024 4:52 AM GMT (Updated: 16 Oct 2024 5:59 AM GMT)

சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கி உள்ளனர் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கி உள்ளனர் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது மேலும் சென்னையில் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை. 140 குடிசைகள் பாதிப்படைந்துள்ளன. தண்ணீர் தேங்கியுள்ள 715 பகுதிகளில் 512 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. மொத்தம் 3,20,174 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன மாநிலம் முழுவதும் 1,293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 77,877 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது


Next Story